Showing posts with label நம்மாழ்வார். Show all posts
Showing posts with label நம்மாழ்வார். Show all posts

Friday, August 11, 2017

மலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1

மலைநாட்டு திவ்யதேசப் பயணம் - பகுதி 1

போகவேண்டும் என பல மாதங்களாக நினைத்திருந்த விஷயம் திடீரென்று கை கூடியது. சமீபத்தில், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸில் அதிகாலை செங்கணூர் ரயில் நிலையத்தில் இறங்கியபோது, மலையாள மண் ஏன் God's own country என்பது விளங்கியது. ஹோட்டல் செல்லும் வரை பசுமை வழியெங்கும் கூடவே வந்தது.  ஜூலை மாதக் கேரளாவின் அருமையான தட்பவெப்ப நிலை.

மலைநாட்டுத் திவ்யதேசங்கள் 13. அவற்றில் 2 (திருவண்பரிசாரம் - திருவாழ்மார்பன்/திருக்குறளப்பன், திருவட்டாறு - ஆதிகேசவப்பெருமாள்) தமிழகத்தில் உள்ளன. கேரளத்தில் உள்ள பதினொன்றில் செங்கணூருக்கு அருகில் ஆறு மலை நாட்டு திவ்யதேசங்கள் உள்ளன. நான் தரிசிக்கச் சென்றது இந்த 6-ஐத் தான். அவை, திருவல்லவாழ் (திருவள்ளா), திருக்கொடித்தானம் (செங்கணச்சேரி), திருவண்வண்டூர், திருவாறன்விளை (ஆரன்முலா), திருப்புலியூர் & திருச்சிற்றாறு(செங்கணூர்). 6 திவ்யதேசங்களும் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பெற்றவை (திருவாய்மொழி வழி பாடல் பெற்றத் தலங்களாம்)

கோயில்களுக்குச் செல்ல ஒரு கார் ஏற்பாடு பண்ணியிருந்தேன். காரை ஓட்டிய டிரைவர் பெயர் ராஜேஷ். சேட்டனுக்கு தமிழ் சரியாக வராவிட்டாலும், புன்னகை அழகாக வந்தது. அதை விட முக்கியம், வண்டியை ஒழுங்காக ஓட்டினார். மேலே குறிப்பிட்ட 6 கோயில்களுக்கு செல்லும் வழியை விரல் நுனியில் வைத்து இருந்தார். ”புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது” பாடலை முழு வால்யூமில் வைத்து, கோயில் செல்வதற்கான என் மனநிலை துளியும் மாறாதவாறு பார்த்துக் கொண்டார்.  ஒரு வைணவ அடியாரான எனக்கு வேறென்ன வேண்டும்? முதல் கோயில் போய்ச் சேர்வதற்குள் தேங்காய் எண்ணெய், நேந்திரங்காய் சிப்ஸ் வாசனை மூக்கில் நுழைந்து ஒரு ஓரமாய் தங்கி விட்டது.

முதலில் சென்றது திருவல்லவாழ். மிகப்பழமையான இத்தலம் ஸ்ரீவல்லப சேத்திரம் என்று போற்றப்படுகிறது.  திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன், கோலப்பிரான் என்ற திருநாமங்கள் கொண்ட பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். தாயாருக்கு செல்வத் திருக்கொழுந்துநாச்சியார், வாத்சல்ய தேவி என திருநாமங்கள். பிராட்டியானவள் ”அகலகில்லேன் இறையுமென்று” என்று நம்மாழ்வார் அருளியபடி, பெருமாளின் திருமார்பிலேயே வீற்றிருந்து ஸ்ரீவல்லபனுக்கு அழகையும், வாத்சல்யத்தையும் கூட்டுகிறாள்! (நம்மாழ்வார் மட்டுமன்றி) திருமங்கை மன்னனும், பெரிய திருமொழி, பெரிய திருமடல் பாசுரங்களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

கேரளாவில் வைணவக் கோயில்களில் குங்குமம், மஞ்சள் காப்பு தருவதில்லை. வாசமிகு (பிரவுன் கலர்) சந்தனப் பிரசாதம் தான். கமுகு இலையில் சாதமும், உப்புமாங்காயும் பெருமாளுக்கு அமுது செய்யப்படுகிறது. கருடாழ்வாருக்கு பெருமாள் நேரே சன்னிதி கிடையாது. உயரமான கல்தூணில் பறக்கும் நிலையில் தங்க கவசத்தோடு பெரியதிருவடி அருள் பாலிக்கிறார். திருவாழ்மார்பன் என்பதால், பெருமாளின் திருவடி தரிசனத்தை விட இவரது திறந்த மார்பின் தரிசனம் இங்கு சிறப்பானதாகக் கருதப்படுகிறது.














தங்கக் கவசத்துடன் உயரமான கொடிமரமும், மூன்றடுக்கு கருட மடமும் (படத்தில் காணலாம்) இத்தலத்திற்கு சிறப்பைச் சேர்க்கின்றன.


பொருசிறைப் புள் உவந்து ஏறும் பூமகளார் தனிக் கேள்வன்
அதாவது “அலைமோதும் சிறகுகளைக் கொண்ட கருடன் மீது மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் திருமகளின் ஒப்பில்லாதா வல்லபன்” என்று ஆழ்வார் கருடாழ்வானை முன்னிட்டு அந்தப் பரந்தாமனைப் போற்றியிருப்பதை நினைவு கூர்கிறேன். கம்பத்தின் உச்சியில் ஒரு கரத்தை நெஞ்சுக்கு நேராக வைத்துக்கொண்டு, மற்றொரு கரத்தை கீழ் அமர்த்தியபடி, இரு சிறகுகளையும் விரித்துக் கொண்டு (பெருமாளைச் சுமந்தபடி) பறக்கத் தயாராக உள்ள கருடனின் சிலை அருமை.

கொடுமைகள் செய்து வந்த தோலாசுரன் என்ற அரக்கனை, ஒரு பிரம்மச்சாரியாக வந்து ஸ்ரீவல்லபப்பெருமாள் வதம் செய்தார் என்பது தல வரலாறு. அதனால், தோலாசுரனை அழித்த சுதர்சன சக்கரத்துக்கு ஒரு தனிச்சன்னதி உள்ளது. மார்கழி திருவாதிரை மற்றும் சித்திரை விஷு அன்று பெருமாளுடைய திருமார்பு தரிசனம் மிகவும் விசேஷம். அன்று, தோலாகாசுரனுடன் போரிட்ட காலத்தில், மான் தோலுடன் ஆன வேடன் கோலத்தில் பெருமாளைச் சேவிக்கலாம். இத்தலத்தில் கதகளி பூஜை விசேஷமானது ஆகும்.  குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தினந்தோறும் கதகளி பூஜை செய்கின்றனர். அதற்காகவே  மண்டபம் ஒன்றைக் கட்டியுள்ளனர்.

மாசி மாத பிரம்மோற்சவத்தின் போது ஒன்பதாம் நாள் அன்று, தோலகாசுரனை ஸ்ரீவல்லபன் வதம் செய்ததைக் கொண்டாடும் வகையில் பள்ளி வேட்டை உத்சவமும், பத்தாம் நாள் பூச நட்சத்திரத்தன்று  குருதி தோய்ந்த  சுதர்சன சக்கரத்தைக் கழுவும் ஆராட்டு உத்சவமும்  சிறப்பாக நடைபெறுகின்றன.  வானமாமலை தெய்வனாயகப் பெருமாளிடமும், திருக்குடந்தை (கும்பகோணம்) ஆராவமுதனிடமும் பரமபதம் எனும் பெரும்பேற்றை வேண்டி சரணாகதி செய்த நம்மாழ்வார், அடுத்துச் சரணாகதி அடைந்தது திருவல்லவாழ் திருவாழ்மார்பனிடம் என்பதால், இத்திருத்தலம் மோட்சத்தலங்களில் மூன்றாவது ஆகும்,







2 ஆழ்வார் பாசுரங்களை அனுபவிப்போம்.

நம்மாழ்வார் பராங்குச நாயகி பாவத்தில் அருளிய அழகிய பாசுரம் இது.

தொல்லருள் நல்வினையால் சொலக்கூடுங்கொல் தோழிமீர்காள்,
தொல்லருள் மண்ணும்விண்ணும் தொழநின்ற திருநகரம்,
நல்லருள் ஆயிரவர் நலனேந்தும் திருவல்லவாழ்,
நல்லருள் நம்பெருமான் நாராயணன் நாமங்களே! - திருவாய்மொழி


தோழியரே! வானோரும், பூவுலக மாந்தரும் போற்றி வணங்கி, கொண்டாடத்தக்க இயற்கைப் பேரரருள் மிக்கதும், கருணையிற் சிறந்த ஆயிரக்கணக்கான அடியவர்கள் நலத்துடன், அப்பரந்தாமனை இறைஞ்சி வாழ்கின்ற திருத்தலமும், ஆன திருவல்லவாழ் நகரில் நின்ற பேரரருளாளனும் நம் தலைவனும் ஆன நாராயணனின் திருநாமங்களை, அப்பரமனது பழம்பெரும் அருளால் விளைந்த புண்ணியத்தால், நாம் என்று ஓத நேருமோ !!?

திருமங்கையாழ்வார் பாசுரம் ஒன்று:

உருவினார் பிறவிசேர் ஊன்பொதி நரம்பு தோல் குரம்பை உள்புக்கு
அருவிநோய் செய்துநின்ற ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்
திருவினார் வேதநான்கும் ஐந்து தீவேள்வியோடு அங்கம் ஆறும்
மருவினார் வல்லவாழ் சொல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே


நெஞ்சே! உருவத்தோடு கூடிய பிறவியெடுத்ததால், சதை பொதிந்த நரம்பும், தோலும் கூடிய உடற்கூட்டுக்குள் புகுந்து கொண்டு, உன்னைத் துன்புறுத்தி வேதனையளிக்கும் ஐம்புலன்களோடு சேர்ந்து வாழ்வதற்கு நீ அச்சமுற்றால்
ஞானச்செல்வமாகிய நான்கு வேதங்களும், ஐந்து அக்னிகளும், ஐவகை வேள்விகளும், வேதத்தின் ஆறு அங்கங்களும்(சிக்க்ஷை, கண்டம், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம்) கற்றுணர்ந்து ஒழுகும் அடியவர் வாழ்கின்ற திருவல்லவாழ் பொருந்தி, அதைப் போற்றி வாழ்வாயாக!

திவ்வியக்கவி பிள்ளைப் பெருமாள் ஐய்யங்கார் தமது நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதியில் கோலப்பிரானைப் பற்றி பாடியுள்ளார். மிக அழகான பாசுரம் அது.

உகந்தார்க்கு எஞ்ஞான்றும் உளன் ஆய், உகவாது
இகந்தார்க்கு எஞ்ஞான்றும் இலன் ஆய் – திகழ்ந்திட்டு,
அருஅல்ல, வாழ்உருவம் அல்ல, என நின்றான்
திருவல்லவாழ் உறையும் தே.


இத்தலத்திற்கான வடமொழி தியானத் தோத்திரம் விசேஷமானது:

ஸ்ரீவல்லப க்ஷேத்ரே பம்பா நதி தீரே கண்டாகர்ண புஷ்கரணி தடே, சதுரங்க கோல விமானச்சாயாயாம் ஸ்திதாய பூர்வாபிமுகாய ஸ்ரீமதே வாத்ஸல்யவல்லி, ப்ரேம வஸுபல்லவித வல்லி நாயிக சமேத சுந்தராய (கோலப்பிரான்) ஸ்ரீவல்லபாய பரப்ரஹ்மனே நமஹ!

தொடரும்........

--- எ.அ.பாலா

*******************************************************

Tuesday, October 04, 2016

தினம் ஒரு பாசுரம் -78

தினம் ஒரு பாசுரம் -78

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?
புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்று இன்றியே
நற்பால் அயோத்தியில் வாழும் சராசரம் முற்றவும்
நற்பாலுக்கு உய்த்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே.

 
-- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

இப்பாசுரத்தில் தொடங்கும் திருவாய்மொழிப் பதிகத்தை தினம் ஒதுமாறு இன்று ஒரு ட்வீட் இட்டேன். நண்பர்கள் சிலர் பொருளும், பலனும் கேட்க, பல வாரங்களுக்குப் பின் “தினம் ஒரு பாசுரம்” இடுகை இட ஒரு உந்துதல் கிட்டியது. முதலில் நேர்ப்பொருள், பின் பாசுரக்குறிப்புகள்.

பொருளுரை:

கற்பார் - கற்க எண்ணுபவர்கள்
இராமபிரானை அல்லால் - (சக்கரவர்த்தித் திருமகன்) இராமனின் பண்பையும் மாண்பையும் விடுத்து
மற்றும் கற்பரோ? - வேறொன்றை கற்க நினைப்பார்களா? (மாட்டார்கள்!)
புற்பா முதலாப் - புல் இனங்கள் தொடங்கி
புல் எறும்பு ஆதி - (சிறிய அளவில் இருக்கும்)அற்பமான எறும்பு, சிற்றுயிர் ஆகியவையோடு
நற்பால் அயோத்தியில் வாழும்- நல்லொழுக்கம் சிறந்து ஒங்கும் அயோத்தி மாநகரில் வாழ்கிற
சராசரம் முற்றவும் - (இன்ன பிற) உயிரினங்கள், மாந்தர் வரையிலும்
ஒன்று இன்றியே - (அவை, அவர்கள்) எவ்வித முயற்சியும் செய்யாத போதிலும்
நற்பாலுக்கு உய்த்தனன் -  நற்தன்மைகளுடன்/குணங்களுடனும் விளங்கும்படிச் (இராமன்) செய்தனன்
நான்முகனார் பெற்ற நாட்டுளே - பிரமன் படைத்த இந்த பூவுலகத்து (வாழ்விலே)!

பாசுரக் குறிப்புகள்:

திருமால், இறைத்தன்மையை விடுத்து சாதாரண மனிதனாக எடுத்த அவதாரம் இராமாவதாரம். ஒரு மனிதனாக வாழ்ந்ததால் சில தவறுகள் ஏற்பட்டிருப்பினும், இராமபிரான், தன் பூவுலக இருத்தலில், உலக மாந்தர்க்கு ஒரு மிகச் சிறந்த முன்மாதிரியாகவே வாழ்ந்து காட்டினான்.  அத்தகைய இராம அண்ணலின் குண கீர்த்தியை நம்மாழ்வார் இப்பாசுரத்தில் அருளியிருக்கிறார்! இராமன் நல்லொழுக்கம், வீரம் ஆகியவற்றில் சிறந்தவனாக இருந்தாலும், அவனது கருணைக் குணமே தலை சிறந்ததாக இருந்தது.


அவன் வனவாசம் சென்றவுடன், அவன் பிரிவால், அயோத்தியில் இருந்த மரங்கள், செடி கொடிகள் கூட துயருற்று, இலை உலர்ந்து/உதிர்ந்து, மலர் வாடிக் காணப்பட்டனவாம்.  குளம், குட்டை, ஆறுகளில் நீர் கொதிப்படைந்ததாம். பாசுரத்தில் “கற்பார்” என்பதற்கு “சான்றோர்” எனவும் பொருள் கொள்ளலாம். ஆக, சான்றோரே, இராமனைக் கற்பதை தலையாய ஒன்றாக நினைக்கையில், நம் நிலைமையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.



ஒன்று இன்றியே நற்பாலுக்கு உய்த்தனன் - ஆழ்வார் ஆணித்தரமாக அருள்கிறார்! இராமபிரான் ஆனவன், தன் இருப்பால், அனைத்து அயோத்தி வாழ் உயிரினங்களையும் நற்பண்பு மிக்கவையாக வைத்திருந்தான் என்கிறார். அத்தகைய குணப்பெருந்தகையாக இராமன் இருந்தான். இதில் இன்னொரு செய்தி இருப்பதாகவும் கொள்ளலாம். பரந்தாமன், தன் விருப்பத்தின் பேரில், அடியார் என அவன் நினைக்கும் எவரையும் தடுத்தாட்கொண்டு, பரமபதம் எனும் பெருவாழ்வை அருள வல்லவன்!

தினம் ஒரு பாசுரம்-72 ஐ நினைவு கூர்கிறேன். குலசேகரப் பெருமாள் தன் பாசுரத்தில், இராமவதாரம் முடிவுற்று திருமால், கம்பீரமாக வைகுந்தம் எழுந்தருளிய காலத்தில், அயோத்தி வாழ் சராசரங்கள் எல்லாவற்றுக்கும் பரமபத பதவி அருளினான் என்று பாடுகிறார். இராமபிரான் கருணை வள்ளல், பரம தயாளன்! 

இப்பாசுரத்தில் ஆரம்பிக்கும் பதிகத்தை தினம் ஓதினால், தீராப் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும் என்பர். இராமனே பல இன்னல்களை சந்தித்தவன் என்பதால் அடியவரின் துயர் புரிந்து அதை சிக்கெனக் களைவான் என்று சொல்லலாம் தானே :-) இப்பதிகத்தை உரைப்பதால், தீர்வு என்பதை விட பிரச்சினைகளை எதிர்கொள்ள மனத்தெளிவும், வலிமையும் மிகும். ஆழ்வாரே சொல்லும் செய்தி தான் இது. பதிகத்தின் கடைப்பாசுரத்தில், “தெளிவுற்று வீவின்றி நின்றவர்க்கு” என்று தொடங்கி “தெளிவுற்ற சிந்தையர் பாமரு மூவுலகத்துள்ளே” என்று நிறைவு செய்கிறார்.

--- எ.அ.பாலா

Saturday, July 30, 2016

தினம் ஒரு பாசுரம் - 76

தினம் ஒரு பாசுரம் - 76


நானக் கருங்குழல் தோழிமீர்காள்! அன்னையர்காள்! அயல் சேரியீர்காள்,
நானித் தனி நெஞ்சம் காக்க மாட்டேன் என் வசம் அன்று இது இராப்பகல் போய்,
தேன் மொய்த்த பூம்பொழில் தண்பணை சூழ் தென் திருப்பேரையில் வீற்றிருந்த,
வானப்பிரான் மணிவண்ணன் கண்ணன் செங்கனி வாயின் திறத்ததுவே!


---திருவாய்மொழி (நம்மாழ்வார்)

இன்று மற்றுமொரு திருவாய்மொழிப் பாசுரம். இது நம்மாழ்வார் பராங்குச (பராங்குசன் என்பது நம்மாழ்வாருக்கு ஏற்பட்ட காரணத் திருநாமம். அதாவது, பேருவகையோடு கூடிய பரபக்தி என்ற அங்குசத்தால், அந்த மாயக்கண்ணனை  கட்டிப்போட்டவர் என்பதால்!) நாயகி பாவத்தில் தென் திருப்பேரையில் கோயில் கொண்டிருக்கும் மகர நெடுங்குழைக் காதன் என்ற அழகான திருநாமம் கொண்ட (மூலவர்) பெருமாளை மங்களாசாசனம் செய்த பதிகத்தில் உள்ள  திருப்பாசுரம் ஆகும்.  

காலம் சென்ற என் நண்பர் டோண்டு ராகவனின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட கள்வன்,  அப்பன் மகர நெடுங்குழைக் காதன்  என்பதால், இவ்விடுகை அவர்க்குச் சமர்ப்பணம்.

என் வலை எழுத்து குறித்து, டோண்டு எழுதிய இடுகை இங்கே.

இனி, தென் திருப்பேரை திவ்யதேசம் பற்றிய சிறுகுறிப்பு.

சுமார் 900 ஆண்டுகள் பழமை மிக்க திருத்தலம் இது.  நவதிருப்பதிகளில் ஒன்று.   நவதிருப்பதிகளும் விசேஷமானவை! திவ்விய தேசங்கள் என்பது தவிர்த்து,  நவகிரகங்களுடன் தொடர்புடையதாகவும் கருதப்படுகின்றன.    அதை விட முக்கியமானது, ஆழ்வார்களில் தலையாய நம்மாழ்வாரும், அவரது சீடரான (கருடாழ்வாரின் அம்சமாக  அவதரித்த) மதுரகவியாழ்வாரும் முறையே அவதரித்த திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி) மற்றும்  திருக்கோளூர் ஆகியவையும் நவதிருப்பதிகள் கீழ் வரும் திருத்தலங்களே!  தென் திருப்பேரை சுக்கிரனுக்குரிய தலமாக வழிபடப் படுகிறது.

தல வரலாற்றிலிருந்து: 

பேரை என்பதற்கு "உடல்"என்பது பொருள்.  திரு(மகள்)வின் உடலோடு தவம் மேற்கொண்டு,  இத்தலத் திருமாலின் திருவருளால் (துர்வாசர் அளித்த) சாபம் நீங்கி, தனது பொலிவான வடிவை பூமிப்பிராட்டி மீண்டும் பெற்றதால் இத்தலத்திற்கு "திருப்பேரை"என்ற காரண பெயர் ஏற்பட்டது.  சோழ நாட்டில்“திருப்பேர் நகர்”என்ற திவ்ய தேசம் ஒன்று இருப்பதால் இத்தலமானது “தென் திருப்பேரை” என்று அழைக்கப்பட்டு வருகிறது.

ஒரு சமயம், பூமிப்பிராட்டி  நீராடும் போது, மீன் (மகரம்) வடிவில் பளபளப்பு மிகுந்த தங்கக் காதுக் குண்டலங்களைக் கண்டு, அதிசயித்து, அவை பெருமாளுக்கு அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்று எண்ணி, அவற்றை எம்பெருமானிடம் அளித்தார். அப்பரமனும் உவப்புடன் அக்குண்டலங்களை அணிந்து கொண்டான். அதன் அழகைக் கண்ட தேவர்கள் எம்பெருமானைப்  போற்றித் துதித்து மலர்மழை பொழிந்து வணங்கினர்.  திருத்தலத் திருமாலுக்கு  மகரநெடுங்குழைக்காதன் என்ற திருநாமம் உண்டானது.

ஸ்ரீதேவித்தாயார் குழைக்காதுவல்லி, கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில், தனிச்சன்னதியில் அருள் பாலிக்கிறார்.  பூமிப்பிராட்டிக்கும் தனிச்சன்னதி. திருப்பேரை நாச்சியார் என்ற திருநாமம். இத்தல உற்சவருக்கு நிகரில் முகில்வண்ணன் என்ற திருநாமம்.



திருப்பேரை நம்மாழ்வாரால் மட்டும் மங்களாசாசனம் செய்யப் பெற்ற ஒன்று.   ”வேதங்களின் ஒலியும் விழாக்களின் ஒலியும் விளையாடும் பிள்ளைகளின்  ஒலியும் இடைவிடாது ஒலிக்கும் ஊரான தென் திருப்பேரையில் சேர்வேன் நானே” என்று பிறிதொரு பாசுரத்தில் நம்மாழ்வார் அருளுவது அழகோ அழகு!!

வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தித்
தாமரைக் கண்ணன் என் நெஞ்சினூடே,
புள்ளைக் கடாகின்றவாற்றைக் காணீர்
என் சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்
வெள்ளச் சுகமவன் வீற்றிருந்த
வேத ஒலியும் விழா ஒலியும்,
பிள்ளைக் குழா விளையாட்டொலியும் 

அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே

பாசுரத்தில் ஆழ்வார் சொன்னபடி, பிள்ளைகளின் விளையாட்டை ரசிப்பதற்காக, சற்றே ஒதுங்கியிருக்கும்படி பெருமாள் கருடனுக்கு கட்டளையிட, இத்தலத்தில் பெரிய திருவடி,  பெருமாளின் நேர் எதிராக சன்னதியில் இல்லாமல், சற்று  இடப்புறம் தனியாக இருக்கிறார் :-)

பாசுரப்பொருள்:

நானக் கருங்குழல் - வாசனை மிக்க கருமையான கூந்தல் கொண்ட
தோழிமீர்காள்! - தோழியர்களே!
அன்னையர்காள்! - அவர்களின் அன்னைமார்களே!
அயல் சேரியீர்காள் - (அக்கம்பக்கத்து) வெளித் தெருக்களில் வசிப்பவர்களே!
நான் இத் தனி நெஞ்சம் - (பேதையான) நான், சுயமாக (தன் விருப்பத்திற்கு) இயங்கும் (என்) மனதை

காக்க மாட்டேன் - கட்டுப்படுத்த இயலாதவளாய் இருக்கிறேன்!
என் வசம் அன்று இது - (என் உள்ளமான) இது (தற்சமயம்) என் வசம் இல்லை
இராப்பகல் போய் - இரவும், பகலும் (என்னைப்) பிரிந்து சென்று
தேன் மொய்த்த பூம்பொழில் - வண்டுகள் மொய்க்கும் மலர்ச்சோலைகளும்

தண்பணை சூழ் - குளிர்ந்த வயல்களும் சூழ்ந்த
தென் திருப்பேரையில் - தென் திருப்பேரை நகரில் 
வீற்றிருந்த - (கம்பீரத்துடனும், மிக்க பொலிவுடனும்) அமர்ந்துள்ள
வானப்பிரான் - இமையவர் தலைவனும், பரமபத நாயகனும் 

மணிவண்ணன் - அழகிய நீலமணி நிறத்தவனும் ஆன
கண்ணன் - (மாயக்) கண்ணனின் 
செங்கனி வாயின் - சிவந்த கனியொத்த அதரங்களின் (அழகில் மயங்கி)
திறத்ததுவே!(என் நெஞ்சமானது) அங்கு தங்கி விடுகிறதே!



 பாசுரக்குறிப்புகள்:

பராங்குச நாயகி பாவத்தில் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி மற்றும் திருவிருத்தப் பாசுரங்கள், பக்தியையும், உயர் தத்துவத்தையும் உள்ளடக்கியதோடு,  நாயகியின் பலவித உணர்வுகளை வெளிப்படுத்தும் கவித்துவம் மிக்க பாடல்கள்.

இன்ன பிற பாசுரங்களில் குயில், மயில், வண்டு ஆகியவற்றை விளித்து நாயகனான திருமாலுக்கு தூது விட்டுக் கொண்டிருந்த நாயகி, அவன் மனம் இரங்கவில்லையே என்ற ஆற்றாமையில், தனது தோழிமார்களையும், அன்னைமார்களையும், பிற சேரிகளில் உள்ளோரையும் அழைத்துப் புலம்புகிறாள்! எங்ஙனம்?

”பாருங்கள்! நீங்கள் கூறும் ஆறுதலை ஏற்க வேண்டிய என் நெஞ்சமே, சுயவிருப்பத்தின் பேரில், என்னை விட்டுப் பிரிந்து அப்பரமனின் சிவந்த அதரங்களின் அழகில் மயங்கி, அவன் வசம் சென்று, இரவு பகலாக, பேதலித்து நிற்கிறது!   ஆகையால், உங்கள் ஆறுதலால் எனக்குப் பயனில்லை” என்பதோடு தான் பெரும் வேதனையில் இருக்கையில், அத்தோழிமார்கள், நறுமணம் மிக்க, மலர் சூடிய கூந்தலோடு  (நானக் கருங்குழல்) அலங்காரமாக வலம் வருவதை மெல்லிய சர்காஸத்துடன் குறிப்பிடவும் மறக்கவில்லை :-)

அடுத்து,  வண்டுகள் ரீங்காரமிடும் தேன் மலர்ச் சோலைகளும், நீர் தளும்பும் குளிர் வயல்களும் சூழ்ந்திருக்கும் தன் நாயகன் வீற்றிருக்கும் இடமான தென் திருப்பேரையும் அத்தனை அழகு என்கிறாள்! அடுத்து நாயகனின் உயர் குணங்களை பட்டியலிடுகிறாள்.  அவன் வானவர்க்கே தலைவன் (தலைமைப் பண்பு), பரமபதத்தின் அதிபதி (அவனை விட்டால் உய்வு என்பதில்லை!), நீலமணிவண்ணன் (உடலழகு),  கோகுலக் கண்ணனாக அவதரித்தவன் (மாயைகளில் சிறந்தவன்),  சிவந்த மெல்லிய இதழ்களை உடையவன் (முக அழகு) என்றெல்லாம் போற்றி தன் காதலையும், ஆற்றாமையும் கவித்துவமாக எடுத்துரைக்கிறாள்.  Nammazhwar at his Best

--- எ.அ.பாலா

Wednesday, June 15, 2016

தினம் ஒரு பாசுரம் - 75

தினம் ஒரு பாசுரம் - 75

அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்
படியே இது என்று உரைக்கலாம்
படியன் அல்லன் பரம் பரன்!
கடிசேர் நாற்றத்துள் ஆலை
இன்பத் துன்பக் கழி நேர்மை
ஒடியா இன்பப் பெருமையோன்
உணர்வில் உம்பர் ஒருவனே  


--- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

என் நண்பர் சுஜாதா தேசிகன் ”நான் இராமானுசன் புத்தகத்தை முன் வைத்து...” (http://sujathadesikan.blogspot.in/2016/06/blog-post_14.html) என்ற இடுகையில் இந்தப் பாசுரம் பற்றிக் குறிப்பிட்டிருந்தார், அதில் கிட்டிய உந்துதலால், ‘தினம் ஒரு பாசுரம் - 75” உருவானது இன்று :-)

பாசுரப் பொருள்:

அடியேன் உள்ளான் - (என்) ஆன்மாவில் (கலந்து) இருப்பவனும்
உடல் உள்ளான் - (என்) தேகத்திலும் இருப்பவனும்
அண்டத்து அகத்தான் - அண்டத்து உயிர்கள் அனைத்தின் உள்ளும் இருப்பவனும்
புறத்துள்ளான் - அவற்றுக்கு வெளியிலும் உறைபவனும்
படியே இது - (அவன்) குணநலன்கள் இவையே
என்று உரைக்கலாம் - என்று (நாம்) கூறினாலும்
படியன் அல்லன் - (என்றும் நமது வரையறைக்கு) உட்படாதவனும்
பரம் பரன்! - (திருமால் எனும்) முழுமுதற்கடவுளும்
கடி சேர் - மிகுந்த / உவப்பளிக்கும்
நாற்றத்துள் ஆலை - வாசனை உடைய கருப்பஞ்சாறு போன்றவனும்
இன்பத் துன்பக் கழி  - இன்ப துன்பங்களுக்கு அப்பாற்பட்ட
நேர்மை - நுண்மை மிக்கவனும்
ஒடியா - குறைக்க/மாற்ற முடியாத
இன்பப் பெருமையோன் - ஆனந்த மயமானவன் / பேருவகை அளிக்க வல்லவன் /அருள் ஓளி வடிவானவனும்
உணர்வில் உம்பர்  - ஞானத்தில் மிக உயர்ந்து நிற்பவனும்
ஒருவனே - ஒருவனே!!!

பாசுர உள்ளுரை:


அடியேன் உள்ளான் உடல் உள்ளான்
அண்டத்து அகத்தான் புறத்துள்ளான்


அடியேன் என்பது உடலை வாகனமாகக் கொண்ட ஆன்மாவைக் குறிக்கிறது என்று கொள்வதே தகும். அதனால் தான், காரிமாறப்பிரான், தொடர்ந்து “உடல் உள்ளான்” என்று உடம்பைத் தனியாகக் குறிக்கிறார். இது தவிர, இதற்கு பல எடுத்துக்காட்டுகள் தரலாம். திருவிருத்தத்தில் நம்மாழ்வார் பாசுரம் அருளத் தொடங்கும்போதே "அடியேன் செய்யும் விண்ணப்பமே" என்றே தொடங்குகிறார்.

”அடியேன் உள்ளான்” என்பதற்கு 3 விதமாக பொருள் கொள்ளலாம். ஒன்று, “என் ஆன்மாவில் பரமன் மேவி இருப்பதால், எனது ஞானம், கர்மம் என்பவை அவனைச் சார்ந்தவையே, அவற்றுக்கு தனிப்போக்கு என்று ஒன்றில்லை”. இரண்டாவது, ஒருமைப் பிரயோகத்தின் வாயிலாக, ஆழ்வார் தனது ஆன்மாவையே குறிப்பதால், ஜீவாத்மாக்களுக்கு இடையே உள்ள ஆன்ம பேதம் சொல்லப்பட்டிருப்பதாகக் கொள்வதும் தகும். மூன்றாவது, ஒரு ஜீவாத்மாவின் ஞானத்திற்குப் பயன் என்பது தன் சேஷத்வத்தை (தொண்டுக்குரிய ஞானத்தெளிவு/ சரணாகதித்துவ மேன்மை அறிதல்) உணர்வது எனலாம். மூன்றாவது எம்பெருமானாரே அருளியது.

“அண்டத்து அகத்தான்” என்று சகல உயிர்களிலும் அந்த பரமாத்மா உறைந்திருக்கையில், பேதம் எங்ஙனம் என்ற கேள்வி எழும். ஆனால், ஆன்ம வழி ஜீவ-ஜீவ பேதத்தை உறுதிப்படுத்தவே ஆழ்வார் இவ்வாறு அருளினார்!! நடுவில் “உடல் உள்ளான்” என்றும் அருளியிருக்கறார் அல்லவா “நம்” ஆழ்வார் :-) அதாவது, எல்லா ஆன்மாக்களுக்கும் ஒரே வகையான அனுபவம் (இறை அனுபவத்தையும் சேர்த்தேச் சொல்கிறேன்) கிட்டுவதில்லை! இவ்வுலகில் ஆன்மா தனியாக இயங்குவதில்லை, உடல் என்ற வாகனத்தின் பாதையோடு பிணைந்தது தான் ஆன்மாவின் பயணமும்.

திருக்குருகைப்பிரான் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு ஒன்றை மீண்டும் நினைவு கூர விரும்புகிறேன்.  பின்னாளில் நம்மாழ்வாருக்கு சீடரான மதுரகவியார், ஆழ்வாரை முதலில்  சந்தித்தபோது "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்ற கேள்வியை வீச, கண் திறந்த ஆழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அருளினார். இந்த கேள்வி பதிலுக்கான உட்பொருள் ஆழமானது.

இங்கே செத்தது என்பது உடல், சிறியது என்பது உயிர் (அ) ஆன்மா எளிமையாக விளக்க வேண்டுமென்றால், பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அவ்வுடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்பவே சுக துக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞ்ஞானத்தை உணர்வதில் உடலெனும் கூடுக்கும் பங்கிருக்கிறது என்ற செய்தியும் இதில் பொதிந்திருப்பதாகக் கொள்ளலாம்! ஆக, ஆன்மா உய்வுற (பரமபதம்) ஒரு பிறப்பே போதுமானதாகவும் இருக்கலாம், பல பிறப்புகளும் தேவைப்படலாம். ஆக, ஜீவன்களிடையே ஆன்ம பேதம் இருக்கிறதல்லவா!

”அடியேன் உள்ளான் அண்டத்து அகத்தான்” வாயிலாக, அனைத்து ஜீவாத்மாக்களும் சுட்டப்பட்டது. “உடல் உள்ளான்” என்பதை பரம்பொருளானது, உயிரில்லாப் பொருள்களிலும் மேவி இருப்பதாகக் கொள்ளலாம். “புறத்து(மு)ள்ளான்” என்பதால், அவனே ஈஸ்வரன் (பரம்பொருள்). ஆக, எம்பெருமானார் தரிசனம் என்று போற்றப்படும் விசிஷ்டாத்வைதம் சொல்லும் தத்துவக்கோட்பாட்டை (சித்(ஆத்மா) அசித்(ஜடப்பொருள்) ஈஸ்வரன்(பெருமாள்)) “நம்” ஆழ்வார் மிக எளிமையாக 2 வரிகளில் அருளி விடுகிறார். அது மட்டுமன்றி, பர-ஜீவ பேதத்தையும், ஜீவாத்மாக்களுக்கு இடையே ஆன பேதத்தையும் ஆழ்வார் நமக்கு எளிமையாக உணர்த்தியிருக்கிறார்.

அனைத்திலும் பரம்பொருள் உறைந்திருப்பதாலேயே, பரமாத்மாவும், ஜீவாத்மாவும் ஒன்று என்று கூறவியலாது. அதனால் தான், எம்பெருமானாரின் சித்தாந்தமான விசிஷ்டாத்வைதம், ஆதிசங்கரின் அத்வைதத்திலிருந்து மாறுபடுகிறது.

மேலும், “புறத்துள்ளான்” என்பது அண்டத்தில் இருக்கும் உயிர், உயிரில்லா என்று எல்லாப் பொருட்களுக்கு வெளியேயும் பரமாத்மா விரவி இருப்பதைக் குறிக்கிறது. பஞ்சபூதங்களில் வியாபித்து நிற்கிறான் அந்தப் பரந்தாமன். அதனால் தான் அவன் “All Pervading".  எல்லாவற்றுக்கும் அந்தராத்மாவும் கூட! ”அண்டத்து புறத்துள்ளான்” என்று சேர்த்தால், அப்பரமன் Parallel Universe-லும் இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம் தானே :-)

படியன் அல்லன் பரம் பரன் - 

தெரிதல் நினைதல் எண்ணல் ஆகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்

என்று நம்மாழ்வரே இன்னொரு பாசுரத்தில் இதையேத் தான் அருளுகிறார்!

பரம்பரன் - பரம்பொருள் வடிவம், பரஞ்சோதி (The Supreme Deity)

ஆலை - கரும்பாலை; கரும்பு; கள்; தேன்; கூடம்; யானைக்கூடம்; நீராரை; ஒருவகைக்கிட்டித்tதண்டனை என்ற பொருள்களும் உண்டு

கழி - அண்ட முடியாத என்ற பொருளும் கொள்ளலாம்.

ஒடியா - நிரந்தரமான

--- எ.அ.பாலா

Friday, March 11, 2016

தினம் ஒரு பாசுரம் - 71

எந்நாளே நாம் மண்ணளந்த இணைத்தாமரைகள் காண்பதற்கு என்று,

எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்,

மெய்ந் நா மனத்தால் வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே,

மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?


---திருவாய்மொழி (நம்மாழ்வார்)

இன்று திருவேங்கட த்ரிவிக்ரமப் பாசுரம் ஒன்று. பொருட்சுவையில் அலாதியான ஒன்றும் கூட



பொழிப்புரை:

எந்நாளே நாம் - எப்போது நாம்

மண்ணளந்த - இந்த பூவுலகை, ( அந்த விண்ணுலகையும் தாவி ) அளந்த

இணைத்தாமரைகள் - (திருமாலின்) இரு திருவடிகளையும்

காண்பதற்கு என்று - காண்பதற்குரிய நாள் (எப்போது  அமையும்) என

எந்நாளும் நின்று - ஒரு நாளும் விடாமல், நின்ற வண்ணம்

இனம் இனமாய் - பெருங்கூட்டமாய்

இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி - வானவர்கள் துதி செய்து, பரம பக்தியுடன் தொழுது

மெய்ந் நா மனத்தால் -  உடல், நா, உள்ளம் என்ற மூன்றையும் கொண்டு

வழிபாடு செய்யும் திருவேங்கடத்தானே - ஆராதிக்கும் திருமலையில் எழுந்தருளியுள்ள கோவிந்தனே

மெய்ந் நான் எய்தி   - மெய் நிலையை நான் அடைந்து

எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? -  உன் திருவடிக் கீழ் அடியவனான நான் சேர்ந்து அமையும் நாள் என்றைக்கோ?

பாசுரக்குறிப்புகள்:

திருவாய்மொழிப் பாசுரங்கள் அந்தாதி வகையைச் சேர்ந்தவை. அதாவது, ஒரு பாசுரத்தின் கடைச்சொல் கொண்டு அடுத்த பாசுரம் தொடங்கும். அந்த வகையில், இப்பாசுரத்திற்கு முந்தையதில் ஆழ்வார் "திணர் ஆர் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?" (தினம் ஒரு பாசுரம்-68 இடுகை) என்று உய்வடையும் நாள் பற்றிய ஐயத்தை எழுப்பியிருந்தார். இப்பாசுரத்திலும், "எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே?"  என்று சந்தேகப்படினும் "மெய்ந் நான் எய்தி" என்று பரமபதத்திற்குத் தேவையான  தகுதியைத் தான் பெற அருளவேணுமாய் வேண்டிய பின்னரே திருவடி நிழல் தஞ்சம் புகுவது பற்றிச் சொல்கிறார், இல்லையா?

 


 மண்ணளந்த இணைத்தாமரைகள்

ஆழ்வார்கள்  வாமன அவதாரத்தை  மிக்க ஏற்றமாய் பாசுரங்களில் பாடியதற்கு, அதன் திருவடி உகந்த சம்பந்தமே காரணம் எனலாம்.  ராமானுஜரும் தனது "சரணாகதி கத்யத்தில்" "லோகவிக்ராந்த சரணௌ சரணம்தே வ்ரஜம் விபோ (உலகமளந்த உன் திருவடிகளை உபாயமெனப் பற்றுவேன்)" என்ற  வடமொழிப் புராண தோத்திரத்தைச் சுட்டி  த்ரிவிக்ரமனின் திருவடிகளையே முன்னிறுத்துகிறார். இன்னும் பல எடுத்துக்காட்டுகள் தரலாம்.

நம்மாழ்வாரின் திருவாய் மொழி -
"குறள் ஆய் அகல் ஞாலம் கொண்ட வன் கள்வன் அடிமேல் குருகூர்ச் சடகோபன் சொன்ன"

"திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும் திசை ஞாலம் தாவி அளந்ததும் நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி நெடும் கண் நீர் மல்க நிற்குமே"

"மாலுக்கு வையம் அளந்த மணாளற்கு, நீலக் கரு நிற மேக நியாயற்கு, கோலச் செந்தாமரைக் கண்ணற்கு "

"மண்ணும் விண்ணும் மகிழக் குறளாய் வலங்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே"

"ஓரடியால் எல்லா உலகும் தட வந்த மாயோன்"

"ஞாலத்தூடே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் சாலப் பல நாள் உகம் தோறு உயிர்கள் காப்பானே"

"தாவி வையம் கொண்ட தடம் தாமரைகட்கே கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ"

"ஞாலத்தூடே நடந்து உழக்கி தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை" (கள்ளழகர்  மங்களாசாசனம்)

ஆண்டாளின் திருப்பாவை -
"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி"

"அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே"

"அன்று  இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி"

திருமழிசையாழ்வாரின் திருச்சந்தவிருத்தம் -
எண் கடந்த யோகினோடு இரந்து சென்று மாணியாய் மண் கடந்த வண்ணம் நின்னை யார் மதிக்க வல்லரே

திருமங்கையாழ்வாரின் பெரியதிருமொழி -
மண் அளந்த தாளாளா தண் குடந்தை நகராளா வரை எடுத்த தோளாளா ஏன் தனக்கு ஓர் துணையாளன் ஆகாயே

முன்னம் குறளுருவாய் மூவடி மண் கொண்டு அளந்த மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்

மலரோன் வணங்க வளர் சேர் அந்தரம் ஏழினூடு செல உய்த்த பாதம் அது  நம்மையாளும் அரசே

திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல்
"ஆரால் இவ்வையம் அடி அளப்புண்டது தான்"

"பேர் வாமனாகிய காலத்து மூவடி மண் தாராய் எனக்கு என்று வேண்டிச் சலத்தினால் நீர் ஏற்று உலகெல்லாம் நின்றளந்தான் மாவலியை" 


 
எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி இனம் இனமாய்- திருவேங்கடமுடையானின்  திருவடிகள் தேவர்களுக்கும் அரிதான செங்கமலத் திருவடிகள் என்று ஆழ்வார் அருளுகிறார். வானவர்களே, நிரந்தரமாக, திரள் திரளாக, அவனது திருவடிகளை தரிசிப்பதற்காக, பணிவன்புடன்  நின்று  தொழுகின்றனர் எனும்போது, மானுடர்க்கு வேறு புகழ் இல்லை என ஆழ்வார் நமக்கு உணர்த்துகிறார். இன்னொரு விதமாகவும் இதைப் பார்க்கலாம்.   அதாவது, மானுட அடியார்களுக்கு (அர்ச்சாவதார) திருமலை உறை அண்ணலின் திருவடிகள், வானுலக மாந்தர் வணங்கும் பரமபத நாயகனின் திருவடித் தாமரைகளுக்கு ஒப்பானவை!

மெய்ந் நா மனத்தால் வழிபாடு - மனம், வாக்கு, காயம் என்று த்ரிகரணங்களாலும் வழிபடுதல் வேண்டும் என்பது ஆழ்வார் வாக்கு. அதுவே சரணாகதித்துவக் கோட்பாடு.  ஆழ்வார் "எந்நாளும் நின்று இமையோர்கள் ஏத்தி இறைஞ்சி" எனப் பாடி  இம்மூன்றுக்கும் பொருத்தமாக  3 வினைகளை (முறையே) அருமையாகக் கையாள்கிறார்.
மெய் --- நின்று
நா --- ஏத்தி
மனத்தால் --- இறைஞ்சி


அதனால் தான் "மனம் வாக்கு காயம்" பாசுரத்தில் "காயம் வாக்கு மனம்" என மாறி வருகிறது.  மெய் என்பது   உடலின் செயல்களைக் குறிக்கிறது: பணிதல், நோன்பிருத்தல் போன்றவை.   காயம் (உடல்) முதலில் வசப்பட வேண்டும் (ஐம்புலனடக்கம்) என்பதால் மெய் முதலில் சொல்லப்பட்டது என்று கொள்வதும் தகும். "மெய்யான  நம்பிக்கையுடன், பற்றுதலுடன், நாவினாலும், மனத்தினாலும் வழிபாடு செய்தல் வேண்டும்" என்றும் கொள்ளலாம்.

ஆண்டாள் திருப்பாவைப் பாசுரம் ஒன்றில் "தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது* வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க" என்று  இம்மூன்றையும் நம்மாழ்வார் சொன்ன வரிசையிலேயே தான் பாடியிருக்கிறாள்.

மெய்ந் நான் எய்தி எந்நாள் உன் அடிக்கண் அடியேன் மேவுவதே? - ஆழ்வார் " பரமனே! அடியேன் உண்மையைக் கண்டு கொண்டேன் . (ஆனால்)அதை முழுமையாக புரிந்து தெளியவல்ல அறிவை நீவிர் அருளி ஆட்கொள்ள வேண்டும்" என்று தன்னைக்  குறைத்து எண்ணிக் கொள்ளும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்!?

பொதுவாக  "மெய்" அல்லது "உண்மை" என்பதற்கு "பரந்தாமனே உபேயம் (இலக்கு), அவனே உபாயம் (அடையும் வழிவகை)" என்று பொருள்படும்.  "மெய்ந் நா மனத்தால்", "மெய்ந் நான் எய்தி" என்று ஆழ்வாரின் சொற்சித்தும் ரசிக்கத் தக்கது :-)

மேவுதல் - அழகான இச்சொல்லை பல பாசுரங்களில் காணலாம். இது 'வெறும் தங்குதல்' இல்லை, (திருவடியில்)"பொருந்தி அமைதல்". இது தவிர இச்சொல்லுக்கு "அடைதல்; விரும்புதல்; நேசித்தல்; உண்ணுதல்; ஓதுதல்; நிரவிச்சமனாக்குதல்; மேலிட்டுக்கொள்ளுதல்; வேய்தல்; அமர்தல்;" என்று பல பொருள்கள் உண்டு.

ஆக, அர்ச்சாவதார கோல திருவேங்கடப் பெருமாளின்  திருவடிகளில் சரண்  அடைவது, அன்று உலகளந்த   திருவடிகளில் சரண் புகுவதற்கு ஈடானது என்பது ஆழ்வார் திருவாக்கு.  அதாவது, திருமலை ஸ்ரீனிவாசனின் திருவடித் தாமரைகள் அத்தகைய சௌலப்யமும் (எளிமை வாய்ந்த கருணை) சௌசீல்யமும் (பேதம் நோக்காத கருணை) மிக்கவை.

திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்!

---எ.அ. பாலா 

Tuesday, March 08, 2016

தினம் ஒரு பாசுரம் - 70

கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலமெல்லாம்

சீறா எறியும் திருநேமி வலவா தெய்வக் கோமானே!

சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!

ஆறா அன்பில் அடியேன்  உன் அடி சேர் வண்ணம் அருளாயே.


--- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

பாசுரப் பொருள்:

கொடு வல் அசுரர் குலமெல்லாம் - கொடிய, வலிமை மிக்க அரக்கர்களின் கூட்டங்கள் அனைத்தும்

கூறாய் நீறாய் - பல துண்டுகளாயும், பின் சாம்பலாயும்

நிலனாகிக்  - பின் மண்ணில் (தேய்ந்து அழிந்து) போகும்படிச்  செய்கின்ற 

சீறா எறியும் - சீறி(யும்) அடங்காது பாய்கின்ற

திருநேமி வலவா - திருச்சக்கரத்தை வளைக்கையில் தரித்தவனே

தெய்வக் கோமானே! - கடவுளர்க்கெல்லாம் தலைவனே

சேறார் சுனைத் தாமரை - சேறு நிறைந்த குளங்களில் தாமரை மலர்கள்

செந்தீ மலரும் - நெருப்பைப் போல சிவப்பாகப் பூக்கின்ற

திருவேங்கடத்தானே! - திருமலையில் வாசம் செய்தருளும் எம்பெருமானே

ஆறா அன்பில் அடியேன்  -  (உன் மீது) மாறாத/குறையாத, அளவில்லாத  அன்புடைய அடியவனான நான்

உன் அடி சேர் - உன் திருவடியை வந்து அடைவதற்கு

வண்ணம் அருளாயே - வழி காட்டி அருள் செய்ய வேணும்

பாசுரக்குறிப்புகள்:

திருமாலின் காத்தருளும், கருணை குணத்தைப் போற்றிப் பாடும் ஆழ்வார், அவனது (பகைவரை) அழிக்கும் தன்மையின் தீவிரத்தை சற்று உக்கிரமாகவேச் சொல்கிறார். இப்படியும் சிலபல உக்கிரப் பாசுரங்கள் உண்டு.

இராமாயண  போர்க்களத்தை ஆழ்வார் விவரிப்பதைப் பார்த்தால் சற்று அச்சம் ஏற்படும்!
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலை போல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே!


திருச்சக்கரத்தை ஒரு நவீன கால ஏவுகணைக்கு ஒப்பாகச் சொல்கிறார் ஆழ்வார். பரமனின் ஆழியானது, பகைவரை வெட்டிச் சாம்பலாக்கி மண்ணோடு மண்ணாக்கி விடும். சில நேரங்களில் காக்கும் தொழிலைச்  செய்ய அழிக்கவும் வேண்டியிருக்கிறதல்லவா? செங்கோல் ஆட்சி புரிய திருச்சக்கரம் தேவையே .... என்று நம் ஆழ்வாரே திருவிருத்தத்தில்  திருவாய் மலர்ந்திருக்கிறார்.
"அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்"


பிறிதொரு பாசுரத்தில்
"கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே!  கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்!" 
என்று கடல் சூழ்ந்த உலகங்களை காத்து ஆள்வதில் மின்னும் திருச்சக்கரத்தின் பங்கை ஆழ்வார் எடுத்துரைக்கிறார்.

பெரிய திருவந்தாதியில்
"கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்"
என்று ஆழ்வார் அருள்கையில் சக்கரமானது பரமனின் வலக்கையை விட்டு அகல்வதே இல்லை என்று அர்த்தமாகிறது.

இங்கு திருச்சக்கரத்தை நம் தீவினைகளை வேரறுக்கும் தன்மைக்குக் குறியீடாகவும் கொள்ளலாம், அதற்கும் ஆழ்வார் பாசுரமே சான்று :-)
"எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்"

"சீறா எறியும்" - பகையை வேரோடு அழிக்கும் திருச்சக்கரமானது, ஓர் அழித்தலுக்குப்  பின்னும், வன்மை சற்றும் குறையாமல், ஒளிர்ந்து கொண்டு அடுத்த ஏவுதலுக்குத் தயாராக இருக்கிறதாம்! அதுவே "சீறா எறியும்".
"திரு நேமி வலவா" - வலவன் = "வலக்கையில் உடையவன்", "திறமையாளன்".
"வல்லவன்" என்பது மருவி "வலவன்" ஆகியதாகக் கொண்டால் "அழிக்கும் தன்மை மிகுந்திருக்கும் திருவாழியை அடக்கியாள வல்லவனே" என்று ஆழ்வார் புகழ்வதாகக் கொள்ளலாம்.


"தெய்வக்கோமானே" --- சுவாமித்துவத்தின் வெளிப்பாடு. பெரும்பாலான திருவேங்கடமுடையான் பாசுரங்களில் சுவாமித்துவத்தை ஆழ்வார் போற்றியிருப்பதை நோக்குகையில், கலியுக அர்ச்சாவதார வழிபாட்டுக்கு மிக உகந்தவன் திருமலையில் வாசம் புரியும் பெருமாளே என்பதை ஆழ்வார் வாக்காகவே கொள்ளலாம்.

"சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன்  உன் அடி சேர் வண்ணம் அருளாயே"


"சேறார் சுனைத் தாமரை" க்கும் "ஆறா அன்பில் அடியேன்"  என்பதற்கும் ஒரு நயமான தொடர்பை உருவாக்கலாம்.  "திருவேங்கடப் பெருமாளே! திருமலையில் உள்ள குளங்களில் நீர் வற்றலாம். ஆனால், உன் மீது எனக்குள்ள பேரன்பானது, என்றும் வற்றாது, மாறாக பெருகிக் கொண்டே இருக்கும் தன்மை உடையது. ஆகவே, என் சரணாகதியை ஏற்று உன் கமலத் திருவடி நிழலில் சேர்த்து, தொண்டு செய்ய அருள் புரிய வேணும்"  என்று ஆழ்வார் இறைஞ்சுவதாகக் கொள்வதிலும் ஒரு சுவை இருக்கிறது தானே!

--- எ.அ. பாலா

Monday, March 07, 2016

தினம் ஒரு பாசுரம் - 69

தினம் ஒரு பாசுரம் - 69


அடியேன் மேவி அமர்கின்ற அமுதே இமையோர் அதிபதியே,

கொடியா அடு புள் உடையானே கோலக் கனிவாய்ப் பெருமானே,

செடியார் வினைகள் தீர்மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே,

நொடியார் பொழுதும் உன் பாதம் காண நோலாது ஆற்றேனே


-- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

திருவேங்கடவன் திருவடிப் பற்றல் பாசுரங்கள் தொடர்கின்றன.

பொருளுரை:


அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - அடியவனான நான் அணுகி அனுபவிக்கும் அமுதமே

இமையோர் அதிபதியே - வானவர் தலைவனே

கொடியா அடு புள் உடையானே - உன் திருக்கொடியாக (பகையை) அழிக்கும்/பொசுக்கும் கருடனைக் கொண்டவனே 

கோலக் கனிவாய்ப் பெருமானே- அழகிய கனி நிகர் அதரம் உடையவனே 

செடியார் வினைகள் தீர்மருந்தே -  செடி போல (அடர்ந்து வளரும்) பாவங்களை ஒழிக்கும் மருந்தானவனே

திருவேங்கடத்து எம்பெருமானே - திருமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணலே

உன் பாதம் காண - உன் திருவடியைக் காண்பதற்காக

நொடியார் பொழுதும் - ஒவ்வொரு  நொடிப்பொழுதும்

நோலாது ஆற்றேனே - நோன்பு எதுவும் மேற்கொள்ளாத நான், பொறுக்க மாட்டாது தவிக்கிறேனே

பாசுரக்குறிப்புகள்:



அடியேன் மேவி அமர்கின்ற அமுதே - முன் எழுதிய பாசுர இடுகைகளில் ஆழ்வார் அருளிய "சென்று சேர், அமர்ந்து புகுந்தேனே" போன்றதே தான் "மேவி அமர்கின்ற" என்பதும். "மேவுதல்" என்பதற்கு  நேர்ப்பொருள் "தங்குதல்". உள்ளர்த்தமாக  மெய் ஒழுக்கம் சார்ந்த  நன்னெறி / புலனடக்கம் எனலாம். அதைக் கைக்கொண்ட பின்னரே "அமர்தல்" என்ற உள்ளம் (ஆன்மா) சார்ந்த அடிப்பற்றுதல் (சரணாகதித்துவம்).

அமுதம் சாகா வரம் தரும் மருந்து. பெருமாளை அமுதம் என்கையில், அவனைப் பிறப்பறுக்கும் "மருந்தாக", பரமபதத்தை/பேரின்பத்தை அருளுபவன் என்று கொள்வது சரியானதே. இதன் வாயிலாக ஆழ்வார் பரமனின் வாத்சல்ய (பேரன்பு) குணத்தைப் போற்றுவதாகச் சொல்லலாம்.

இமையோர் அதிபதியே - அமுதம் என்றழைத்தவுடன்,  தேவர்கள் நம் ஆழ்வார் மனத்து வர,  "இமையோர் அதிபதியே" என்று திருமாலின் சுவாமித்துவ (இறைத்தலைமை) குணத்தைப் போற்றுகிறார். மேலும், திருநாடான வைகுந்தத்தில் இமையவருக்குக் கிட்டும் இறை அனுபவத்துக்கு ஈடான ஒன்றை  தான் பூவுலக வாழ்விலேயே அனுபவிப்பதை ஆழ்வார் குறிப்பதாகக் கொள்வது ஒரு நயம் சார் கருத்தே.

கொடியா அடு புள் உடையானே - 
"அடு புள்" = (பகையை) அழிக்கும் பறவை (கருடன்)
இதை, ஐம்புலன்கள் சார் சிற்றின்ப ஆசைகளை பொசுக்கும் வல்லமைக்குக் குறியீடாகக் கொள்ளலாம். அத்தகைய வல்லமையுடைய "பெரிய திருவடி" ஆகிய கருடனை எம்பெருமான் ஆனவன் தனது திருக்கொடியாக வைத்திருப்பவன்.

 மற்றொரு பாசுரத்தில் "உள் நிலாவிய ஐவரால் குமை தீற்றி என்னை உன் பாத பங்கயம் நண்ணிலா வகையே நலிவான் இன்னம் எண்ணுகின்றாய்" என்று தானே ஐம்புலன்களால் பெரும் அவதியுறுவதாக (ஆழ்வார்களில் தலையாய) நம்மாழ்வாரே அருளியிருக்கையில், பொருளாசையே பிரதானமாக இருக்கிற தற்காலச்சூழலில், நாமெல்லாம் எம்மாத்திரம்?!

அதோடு, அக்கருடன் மீதேறி விரைந்து சென்றுத் தானே "ஆதிமூலமே" என்று அலறிய யானைக்கு வரதன் அபயம் அளித்தான்.  ஆக, பரந்தாமனின் "சௌசீல்யம்" (உயர்வு/தாழ்வு பாராமல் காத்தருளும் குணம்) இங்கு வெளிப்பட்டது!

கோலக் கனிவாய்ப் பெருமானே - பல பாசுரங்களில் ஆழ்வார், திருமாலின் திருவாயை தாமரை மலருக்கு ஒப்பாகச் சொல்லியிருக்கிறார், அதன் மென்மைக்காகவும், சிவந்த நிறத்திற்காகவும். இங்கு கனியுடன் அதரங்களை ஒப்பிடுவது, பரமனது இனிய, குழைந்த புன்முறுவலை எடுத்துக் காட்டவே. புன்னகையுடன் கூடிய, எளிமைத்தன்மையுடன் அடியவர்க்கு மனம் இரங்கும் கல்யாண குணமான "சௌலப்யத்தை"க் குறிப்பதாகச் சொல்லலாம் தானே!

கண்ணபிரானாக, பாஞ்சாலி, குசேலன், குந்தி, பீஷ்மர், கர்ணன் என்று பலருக்கு சௌலப்யம் காட்டியிருக்கிறான்.  ஆக, முதல் 2 வரிகளில்  பரந்தாமனது 4 முக்கியமான கல்யாண குணங்களையும் ஆழ்வார் உணர்த்தி விடுகிறார்.

செடியார் வினைகள் தீர்மருந்தே - செடி போல அடர்ந்து படர்ந்து வளரும், துன்பம் தரும் வினைகளை ஒழிக்கும் பெரு மருந்து, அர்ச்சாவதாரமாக எழுந்தருளியுள்ள, திருமலை உறை நாதனே என ஆழ்வார் அறுதியிட்டு அருளுகிறார். பாவங்கள் ஒழிந்தால் தானே பரமபதம் கை கூடும்! (திருமழிசைப்பிரானின் "விண் கடந்த சோதியாய் விளங்கு ஞான மூர்த்தியாய் பண் கடந்த தேசமேவு பாவ நாச நாதனே"  என்ற முன் எழுதிய இடுகையின் பாசுர வரிகளை நினைவு கூர்க)

நொடியார் பொழுதும் உன் பாதம் காண நோலாது ஆற்றேனே -  "இப்படி கல்யாண குணங்களைக் காட்டியும், தீவினையைப் போக்க வல்ல மருந்தாகவும் விளங்கும் எம்பிரான் உன் திருவடியைக் காண வேண்டி, நோன்பு எதுவும் மேற்கொள்ளாத அடியேன் ஒவ்வொரு நொடியும் கிடந்து துடிக்கிறேன்" என்று மருகுகிறார் ஆழ்வார்.  இதை வேறு விதமாகவும் நோக்கலாம்: "நான் ஒரு நொடிப் பொழுதும் நோன்பிருக்காமலேயே உன்னைக் காண ஏங்கித் தவிக்கிறேன்".

எப்படி பொருள் கொண்டாலும், இதன் சாரம் ஒன்று தான். நோன்பு இருந்து, பூசைகள் செய்து வாழும் அடியார்களின் ஆற்றாமைக்கு சற்றும் குறைந்ததல்ல தனது ஆற்றாமை என்று ஆழ்வார் குறிப்பில் உணர்த்துகிறார். இதில் நம்பிக்கை தரும் அருட்செய்தியும் உள்ளது. "ஞான அனுட்டானங்கள் முக்கியமில்லை. அவனை அடைய பரமபக்தி ஒன்றே போதும். அம்மாயவனைக் கட்டி இழுக்க, பக்தி யோகமானது ஞான யோகத்தைக் காட்டிலும் சிறந்தது" என்பதை ஆழ்வார் வாக்காக நாம் கொள்வோம்.

திருவேங்கடவன் திருவடிகளே சரணம்!

---எ.அ. பாலா

Friday, March 04, 2016

தினம் ஒரு பாசுரம் - 68

தினம் ஒரு பாசுரம் - 68


புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ,
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ,
திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே,
திணர் ஆர் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?


(திருவாய்மொழி - 6.10.5) - நம்மாழ்வார்

இன்று ஒரு ராம-கிருஷ்ண பாசுரம். ஆழ்வார் திருவேங்கடமுடையானை ராமனாகவும், கண்ணனாகவும் பாவித்து, அனுபவித்து எழுதிய ஓர் அற்புதமான திருப்பாசுரம். ஸ்ரீராமனாகவும், கோகுல கிருஷ்ணனாகவும் பூவுலகில் அவதாரம் செய்த திருமால் தான், கலியுகத்தில் அர்ச்சாவதார கோலத்தில் திருமலை ஸ்ரீநிவாசனாக அருள் பாலிக்கிறான் என்பது ஆழ்வார் தரும் அருட்செய்தியாம்.

மூல வேங்கடவன் திருத்தோள்களில் அம்புறாத் தூணி கட்டிய  அடையாளமும், நாணேற்றிய தோள் தழும்பும் இருக்கின்றன.  அவன்  திருவயிற்றுப் பகுதியில்  உரலில் கட்டப்பட்ட  தாம்புக் கயிற்றுத் தழும்புகளைக் (அதனால் தான் அவன் தாமோதரன் = தாமம் + உதரன்) காணலாம். ஆக, திருமலை உறை  எம்பெருமானே சீதாவின் ராமன், அவனே யசோதாவின் கிருஷ்ணன்!

பொருளுரை:


புணரா நின்ற மரம் ஏழ் -  தனித்தனியாக (ஒரு நேர்க்கோட்டில்)  நின்ற ஏழு மரங்களை  (துளைத்துச்செல்லும் வண்ணம்)
அன்று  - அன்றொரு காலத்தில் (இராமாவதாரத்தில்)
எய்த ஒரு வில் வலவாவோ - அம்பெய்த திறமையான வில்லாளனே !
புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் - பிணைந்து  (இரட்டை மருத மரமாக) நின்ற இரு மரங்களுக்கு
நடுவே போன முதல்வாவோ - இடையே (உரலை  இழுத்தபடி நடந்து) சென்ற ஆதி முதல் நாயகனே !
திணர் ஆர் மேகம் எனக் - (நீருண்ட) கனம் மிக்க மேகங்களை ஒத்த 
களிறு சேரும் திருவேங்கடத்தானே - (கருமையான) யானைகள் சேர்ந்து திரியும் திருமலையில்  எழுந்தருளிய அண்ணலே !
திணர் ஆர் சார்ங்கத்து - வலிமை மிக்க ஸ்ரீசார்ங்கம் எனும் வில்லைத் தாங்கிய (எம்பிரானான)
உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே? - உனது திருவடிகளை அடியேன் அணுகிப் பற்றுவது என்றைக்கோ?

 

பாசுரக்குறிப்புகள்:


புணரா நின்ற மரம் ஏழ் அன்று எய்த ஒரு வில் வலவாவோ,


 இராமனின் விற்திறமை, வாலியை வெல்வதற்குரிய வலிமை ஆகியவை பற்றிய சுக்கிரீவனின் ஐயத்தைப் போக்க, அந்த ராகவன் ஒரே அம்பை எய்து ஏழு மராமரங்களைத் துளைத்துச் செல்லும்படி செய்து காட்டிய நிகழ்வை ஆழ்வார் எடுத்தாள்வதில் ஒரு சூட்சமம் உள்ளது :-) "சுக்கிரீவன் ஆனவன் உனது குணபெருமைகளை, ஆற்றலை அறியாதவனாய் உன் மேலேயே  சந்தேகம் கொண்டான்.  அதைப் பெரிதாக எண்ணாமல் அந்த சந்தேகத்தையும் தீர்த்து வைத்த, பெருந்தன்மையும், எளிமையும் மிக்கவன் நீ.   உன் பரம அடியவன் ஆன நானோ, துளிச் சந்தேகமும் இன்றி , நீ மட்டுமே கதி என்று நம்பி வந்தவன். எனக்கு மனம் இரங்கலாகாதா?" என்று நம் ஆழ்வார் உள்ளர்த்தமாகச் சொல்வதாகக் கொள்வதில் தான் எத்தனை சுவை !!!

 







புணர் ஏய் நின்ற மரம் இரண்டின் நடுவே போன முதல்வாவோ,

அடுத்து ஆழ்வார் கிருஷ்ண அவதார நிகழ்வைச் சுட்டுகிறார். யசோதாவின் சின்னக்கண்ணன் இரட்டை மரங்களுக்கு  இடையே உரலுடன் ஓடி
("பணமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட அதனோடும் ஓடி அடல் சேர்,
இணைமருதிற்று வீழ நடைகற்ற தெற்றல் வினை பற்று அறுக்கும் விதியே
"
என்ற திருமங்கை மன்னனின் பாசுர வரிகளை நினைவு கூர்க!)
அவை பெயர்ந்து விழுந்ததால், அதுவரை மரங்களாக இருந்த, நாரதரால் சபிக்கப்பட்ட குபேரனின் புதல்வர்கள் சாப விமோசனம் பெற்றனர். அதாவது, எப்படி, எப்போது ஒருவரின் தீவினையை, சாபத்தைப் போக்கி ரட்சிக்க வேண்டும் என்று அந்த மாயனுக்குத் தெரியும் என்பதை ஆழ்வார் குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்வது தகும்.

முதல்வா - பரந்தாமனே "ஊழி முதல்வன், தனியொரு வித்து, பரம்பொருள், முத்திக்கும் வித்து" என்று உணர்க.

திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும் திருவேங்கடத்தானே,

இங்கு திருமங்கை மன்னன் திருநெடுந்தாண்டகத்தில், திருமூழிக்களத்துப் பெருமாளை மங்களாசாசனம் செய்த பாசுர வரிகளைப் பார்ப்போம்.
தென்னானாய் வடவானாய் குடபாலானாய் குணபாலதாயினாய் இமையோர்க்கென்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலானாயே.

திருமாலே களிறு போன்றவன் என்கிறார் திருமங்கை ஆழ்வார். தென் திருமாலிருஞ்சோலை மலையிலும், வட வேங்கடத்திலும்,  குட(மேற்கில்)  திருவரங்கத்திலும், குண(கிழக்கில்) திருக்கண்ணபுரத்திலும் என்று நான்கு திசைத் திருத்தலங்களிலும்  நின்றும், கிடந்தும் அருள் பாலிப்பவனை நான்கு (வலிமை, பெருமை மிகு) யானைகளாக ஆழ்வார்  பார்க்கிறார்.

திணரார் சார்ங்கத்து உன் பாதம் சேர்வது அடியேன் எந்நாளே?

ஆழ்வார் உணர்த்துவது: "உன் கையில் சார்ங்கத்தைக் கண்டவுடன் எனக்கு பரமபதம் கிட்டுவது குறித்த பயம் முழுதும் விலகி விட்டது. அதற்கான தடைகளை நீ உடைத்தெறிவாய் என்ற நம்பிக்கையும் மிகுந்து இருக்கிறது.  ஆனால், அது கை கூடி வரும் நாளைச் சொல்லல் ஆகாதா?"  ---- இப்படிக் கொள்வதில் சுவை இருக்கிறது தானே!

"புணர்" என்பதற்கு "சேர்" என்பதோடு  "புதுமை, சமீபம்" என்ற பொருள்களும் உண்டு.
காதலித்தவளைக் கூட நேராமையால் தலைவன் தனித்துறைந்து வருந்துதலைக் கூறும் புறத்துறைக்கு   "புணராவிரக்கம்" என்று பெயர்.

வலவன் = திறமையுடையவன்; வெற்றியாளன்; தேர்ப்பாகன்; திருமால்; வலப்பக்கத்து உள்ளவன்; ஓர் அசுரன்

"திணர்" என்பதற்கு செறிவு, மிகுதி. நெருக்கம், அடர்த்தி, வலிமை; உறுதி,  பருமன், கனம்  என்று பல பொருள்கள்.

"ஆர்" என்ற இரண்டெழுத்துச் சொல்லுக்கு இத்தனை பொருள்கள் உள்ளன. நம் தமிழ் தான் எத்தனை பெருமைக்குரியது!
நிறைவு; பூமி; கூர்மை; அழகு; மலரின்பொருத்துவாய்; காண்க:ஆத்தி; திருவாத்தி; ஆரக்கால்; தேரின் அகத்தில் செறிகதிர்;அச்சுமரம்; செவ்வாய்; சரக்கொன்றை; அண்மை; ஏவல்; பலர்பால்படர்க்கைவினைமுற்றுவிகுதி; மரியாதைப் பன்மைவிகுதி; ஓர்அசை; அருமையான.

---எ.அ.பாலா

Thursday, March 03, 2016

தினம் ஒரு பாசுரம் - 67

தினம் ஒரு பாசுரம் - 67

உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி அம்மானே !
நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி ! நெடியாய் ! அடியேன் ஆருயிரே !
திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து எம்பெருமானே !
குலதொல் அடியேன் உன பாதம் கூடும் ஆறு கூறாயே.


(திருவாய்மொழி - 6.10.1) - நம்மாழ்வார் 


முந்தைய பாசுர இடுகை "செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே" எழுதிய கையோடு, திருமலைக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு (எதிர்பாராமல்) கிடைத்தது.  தெரிந்த ஒருவர் வாயிலாக ஸ்பெஷல் தரிசனம் :-) நன்றி தெரிவித்து, இன்று இன்னுமொரு திருவேங்கடமுடையான் அடிப்பற்றல் பாசுரம்!








பாசுரப்பொருள்:

உலகம் உண்ட பெருவாயா ! - (பிரளய காலத்தில்) பூவுலகை விழுங்கி (திருவயிற்றில் வைத்துக்) காத்த அகண்ட வாயனே
உலப்பில் கீர்த்தி அம்மானே ! - நிகரில்லாத புகழ்/பெருமை வாய்ந்த இறையவனே 
நிலவும் சுடர் சூழ் - மாறாத/மங்காத பிரகாசம் கொண்ட
ஒளிமூர்த்தி ! -  சோதி வடிவானவனே
நெடியாய் ! - (வடிவத்திலும், குணபெருமைகளிலும்) உயர்ந்து நிற்பவனே
அடியேன் ஆருயிரே ! - என் உயிருக்கு ஒப்பானவனே
திலதம் உலகுக்காய் நின்ற - உலகுக்கு ஒரு திலகம் போல வாய்த்திருக்கும்
திருவேங்கடத்து எம்பெருமானே ! - திருவேங்கடமலையில் நின்று அருளும் அண்ணலே
குலதொல் அடியேன்- பல தலைமுறைகளாக உனக்குத் தொண்டு செய்யும் குலத்தில் பிறந்த நான்
 உன பாதம் கூடும் - உனது திருவடிகளை வந்தடையும்
ஆறு கூறாயே - வழிவகையை உரைப்பாயாக

பாசுரக்குறிப்புகள்:

உலகம் உண்ட பெருவாயா - பிரளயத்தின்போது பூவுலகை திருமால் விழுங்கி தன்  பொன் வயிற்றில் வைத்துக் காத்த நிகழ்வை ஆழ்வார் சுட்டியதில் சாரம் இருக்கிறது.  நல்லவர், தீயவர், அறிவில் சிறந்தவர்/ குறைந்தவர், செல்வந்தர், ஏழை, இன்னும் பலப்பல உயிரினங்கள் என்று அனைவரின் /அனைத்தின் மீதும் கருணை கொண்டு ரட்சித்த பரமன் ஆனவன், அடியார்களை  ஒருபோதும் கை விட மாட்டான்  என்ற  நம்பிக்கை தரும் செய்தியை , பூவுலகை உண்ட நிகழ்வைச் சுட்டி,  ஆழ்வார்   குறிப்பில் உணர்த்துவதாகக் கொள்வது பொருத்தமான ஒன்றே.

நிலவும் (ETERNAL) சுடர் சூழ் ஒளிமூர்த்தி - பரமனின் திருமேனி ஒளிவடிவம் என்பது நேரடிப்பொருளாக இருந்தாலும், ஒளி என்பது ஞானத்தையும் குறிக்கிறது. அவன் ஞான வடிவானவன் (icon of effulgent knowledge), அவனைப் பற்றினாலே அறியாமை இருள் அகலும் என்று கொள்ள வேண்டும். அதுவே உய்வுக்கு முதல் படி.

நெடியாய் - ஆதியும் அந்தமும் இல்லாது உயர்ந்து பெருகி நிற்பவன் (All Pervading) எனும்போது, அவனே பரம்பொருள் என்று தெளியலாம்.

அடியேன் ஆருயிரே - தன் ஆன்மாவில் அந்தப் பரந்தாமன் கலந்து விட்டதாக ஆழ்வார் அருளுவது அத்வைதக் கோட்பாடு போலத் தோன்றினாலும், "ஆன்மாவை ஆள்பவன்" (Soul's Master) என்பதே சரியானது.  திருமால் ஆனவன் தனது வடிவழகையும், கல்யாண குணங்களையும் காட்டிக் காட்டியே ஆழ்வாரை மறுக  வைத்தான் என்பது புலப்படுகிறது :-)

திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்து -  பூமிப்பிராட்டிக்கு அழகிய ஆபரணம் போல விளங்குவது திருமலையாகிய திவ்விய தேசம் என்பதால் தான் அது "திலதம் உலகுக்காய் நின்ற"து. அதனால் தான், ஸ்ரீநிவாசன் கலியுகத்தின் கண் கண்ட தெய்வமும் கூட.

குலதொல் அடியேன் = குலம் + தொல் + அடியேன் .... குலப்பழமையாக அடிமை (தொண்டு) செய்பவன். இங்கு பெரியாழ்வார் அருளிய திருப்பல்லாண்டில் வரும் "அபிமான துங்கன் செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழ அடியேன்" என்ற பாசுர வரியை நினைவு கூர்கையில், ஆழ்வார்கள், தாங்கள் மட்டுமல்லாமல், தங்கள் தலைமுறை முன்னோர்களும் சீரிய வைணவ அடியாராக இருந்ததைக் குறிக்கவே "தொல்லடியேன், பழவடியேன்" என்ற சொல்லாட்சியை பாசுரங்களில் பயன்படுத்தினர் என புரிந்து கொள்ளலாம்.

உன பாதம் கூடும் ஆறு கூறாயே - மேலே சொன்னபடி, "குல பரம்பரையாக தொண்டு செய்து வரும் என்னை  நீ நோக்காவிடில் வேறு எவர் நோக்கி ரட்சித்து உய்வளிக்க (திருவடி நிழல் தர) முடியும்"  என்று உரிமையோடு நம் ஆழ்வார் பெருமாளைக் கேட்கிறார்.  ஆக இவ்விஷயத்தில் பரமனுக்கென்று தனியாக தெரிவு என்பது கிடையாது, ஆழ்வார் கேட்பதே அவனது விருப்பத்தேர்வும் :-))) 

--- எ.அ. பாலா  

Friday, February 26, 2016

தினம் ஒரு பாசுரம் - 65

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா 

நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே


நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே 


புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே


---நம்மாழ்வார் (திருவாய்மொழி)

இன்று இன்னொரு திருவேங்கடமுடையான் திருப்பாசுரத்தை அனுபவிக்கலாம். திருக்குருகைப்பிரான் அருளிய 1102 பாசுரங்களில், கோயிலிலும், இல்லத்திலும்  தினம் ஓதுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பதிகங்களின்  (12 X 11 = 132 பாசுரங்கள்) தொகுப்பு  "கோயில் திருவாய்மொழி" என்று அழைக்கப்படுகிறது. இப்பாசுரம், அத்தொகுப்பில் வருகிறது. அற்புதமானதொரு பாசுரம் இது.

பாசுரப்பொருள்:

அகலகில்லேன் - "(உன்னை விட்டு) பிரிய மட்டேன்
இறையுமென்று - ஒரு நொடியும்" என்று
அலர்மேல் மங்கை - தாமரை  மலரில் அவதரித்த திருமகள் ஆனவள்
உறை மார்பா - தங்கி இருக்கும் திருமார்பை உடையவனே!
நிகரில் புகழாய் - ஒப்பில்லா பெருமை வாய்ந்தவனே!
உலகம் மூன்றுடையாய் - நாகலோகம்,பூவுலகம், வானுலகு என்ற மூவுலகங்களின் நாயகனே!
என்னை ஆள்வானே - என்னை அடிமையாக ஏற்றவனே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் - நிகரற்ற தேவர்கள் மற்றும் முனிவர்களின்
விரும்பும் திருவேங்கடத்தானே - பேரன்புக்கு பாத்திரமான, திருமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணலே!
புகல் ஒன்றில்லா - தஞ்சம் புக (வேறு) இடம் ஒன்றுமில்லாமல்
அடியேன் - (உன் பக்தனான) நான்
உன் அடிக்கீழ் - உனது திருவடியின் கீழே
அமர்ந்து புகுந்தேனே - தங்கி சரண் அடைந்தேனே !




பாசுரக்குறிப்புகள்:
வைணவர்கள் பிரபந்தப் பாசுரங்களை இசை நயத்துடன் ஓதும்போது, செவிக்கு இனிமையாக இருக்க வேண்டி, கடினமான சொல் ஏவல்களை தவிர்ப்பர்.  "ற்ற" என்பதை "த்த" என்றும், "ன்ற" என்பதை "ன்ன" என்றும் திருத்தியே ஓதுவர். இப்பாசுரத்தை எடுத்துக்கொண்டால் ஓதுவது இப்படி இருக்கும்.

அகலகில்லேன் இறையுமென்னு அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்னுடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்னில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

'போற்றி" என்பது "போத்தி" என்றே ஓதப்படும் ( அன்னு இவ்வுலகம் அளந்தாய்  அடி  போத்தி - திருப்பாவை  )
"கற்று" என்பது "கத்து" ஆகிவிடும் (கத்துக்  கறவை கணங்கள்  பல கறந்து - திருப்பாவை)


இது ஆழ்வாரின் பேரன்பை வெளிப்படுத்தும் எளிமையான பாசுரமே.  நயம், உட்பொருள் சார் குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்.

"அகலகில்லேன் இறையுமென்று" -  ஒரு நொடியும் (இறையும்) பிரிந்திருக்க மாட்டேன் என்று பிராட்டியே பரமன் மார்பில் குடி கொண்டு விட்டதில் அடியவர்க்கு 2 செய்திகள் உள்ளன. ஒன்று,  திருமாலை சிக்கெனப் பற்றி சரண் புகுவதே உய்வுக்கான வழி. இரண்டு, நாம் தவறுகள் செய்தாலும், நமக்கு அருள் செய்ய  பரிந்துரைக்க (புருஷகாரம்) அக்கடல் அன்னை அப்பரந்தாமன்  கூடவே வாசம் செய்கிறாள்.

திருமாலுக்குரிய கல்யாண குணங்களில்  நான்கு குணங்கள் மிகவும் ஏற்றமானவை. அவை
1. வாத்சல்யம் (பேரன்பு)
2. சுவாமித்துவம் (தலைமையான இறைத்தன்மை).  அதாவது கடவுளர்க்கெல்லாம் தலைமைத்தன்மை உடையவனாக  இருக்கும் சிறப்பைக் கூறுவது
3. சௌசீல்யம் (ஏற்ற தாழ்வு பாராமை). அதாவது உயர்ந்தவன்/தாழ்ந்தவன், அறிவாற்றல் மிக்கவன்/குறைந்தவன்  என்ற பேதங்கள் பாராமல் அருளுவது
4. சௌலப்யம் (எளிமைத்தன்மை ). அதாவது, உலகமாயைக்கு அப்பாற்பட்டவனான  பரந்தாமன் மனித வடிவில் வந்து அடியவரோடு வாழ்வது / உதவுவது.

தன்னைச் சரணடையும் அடியவரிடம் பரமன் இவற்றைக் காட்டுகிறான்.   அவதார காலங்களில், இராமனாக, கிருஷ்ணனாக, அவன் நேரடியாக அவற்றை வெளிப்படுத்தியது நாம் அறிந்ததே, குகன், அனுமன் , விபீடணன், யசோதா, அருச்சுனன், திரௌபதி, குசேலன்  என்று பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.மேற்கூறிய 4 குணங்களும் இப்பாசுரத்தில் போற்றப்பட்டுள்ளன.

"நிகரில் புகழாய்" எனும்போது  வாத்ஸல்யத்தையும்,  "உலகம் மூன்றுடையாய்" எனும்போது  சுவாமித்துவத்தையும், "என்னை ஆள்வானே" என்று சௌசீல்யத்தையும், "நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்  திருவேங்கடத்தானே" எனும்போது  சௌலப்யத்தையும் ஆழ்வார் குறிப்பில் உணர்த்துகிறார்.

"நிகரில் அமரர்" - ஏன் தேவர்களை ஒப்பில்லாதவர் என்கிறார் ஆழ்வார்? பரமபத வாசம் கிடைக்காவிட்டாலும், திருமாலை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கும், அவனது நெருக்கத்தை அனுபவிக்கும் உரிமை உடையவர்கள் அந்த வானவர்கள்! 

"அகலகில்லேன் இறையுமென்று" என்பதை  ஆழ்வார் தன்னைப்பற்றி  சொல்லிக் கொள்வதாக அணுகுவதிலும் ஒரு சுவை இருக்கிறது. "உன்னை விட்டுப் பிரியவே கூடாது என்று" என்று ஆழ்வார் பாசுரத்தைத் தொடங்கி, உடனடியாக அவருக்கு பெருமாளின்  கல்யாண குணங்கள் நினைவுக்கு வந்து அடுத்த 2 அடிகளில் அவற்றைப் போற்றி விட்டு மீண்டும் 4வது வரியில் "வேறு புகல் எதுவுமே இல்லாத எளியனான நான் உன்னிடம் பூரண சரணாகதி அடைந்து விட்டேன்" என்று அவனைப் பிரியாத நிலைக்கு தான் என்ன செய்தார் என்பதைக் கூறி பாசுரத்தை நிறைவு செய்கிறார். கடைசியில், திருவடி நிழலை கன்ஃ பர்ம் பண்றதுக்குத் தான் நம்ம ஆழ்வார் நடு 2 அடிகளில் "எவ்வளவு பெரிய ஆள் நீ!" என்று பரமனின் சீர்மிகு குணங்களைப் போற்றுகிறார் போல :-)

உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே - முந்தைய பாசுர இடுகையில் சொன்ன  "சென்று சேர் திருவேங்கட மாமலை" போல இதிலும் பொருள் பொதிந்துள்ளது. அவசர கதியாக, தடாலடியாகப்  புகும் சரண் அன்று இது!  இது, தவமிருந்து, உடலும், ஆன்மாவும் ஒன்றுபட்ட நிலையில் அவன் திருவடியைப் பற்றுவது. "அமர்ந்து" என்பது உடல் சார்ந்த (Physical) அமைதியைக் குறிப்பதாகவும் "புகுந்தேனே" ஆன்மா  சம்பந்தப்பட்டதாகவும் (of spirit, spiritual) கொள்ளலாம் தானே?

---எ.அ. பாலா

Monday, February 22, 2016

தினம் ஒரு பாசுரம் - 64

தினம் ஒரு பாசுரம் - 64

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் 

அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் 


சென்று சேர் திருவேங்கட மா மலை 


ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே


-திருவாய்மொழி (நம்மாழ்வார்)


பொருள்:

குன்றம் ஏந்திக் - கோவர்த்தன மலையை (தனது ஒரு விரலால் உயர்த்திப் பிடித்து
குளிர் மழை காத்தவன் - (ஆயர் குல மக்களை) குளிர்ந்த பெருமழையிலிருந்து  காத்தவனும்
அன்று - முன்னொரு காலத்தில்
ஞாலம் அளந்த பிரான் - (தனது திருவடிகளால்) உலகங்களை அளந்த நம் தலைவனும்
பரன் - (அனைத்து உயிர்களையும் ரட்சிக்கும்) எம்பெருமானும்
சென்று சேர் - சென்று தங்கி (அருள் பாலிக்கும்)
திருவேங்கட மா மலை ஒன்றுமே -  திருமலை ஒன்றை மட்டுமே
தொழ  - (போற்றி) தொழுதோமேயானால் 
நம் வினை ஓயுமே - நமது பாவங்கள் யாவும் தொலைந்து போகுமே 




பாசுரக்குறிப்புகள்: 

நம்மாழ்வாருக்கு (ஏன் எல்லா ஆழ்வார்களுக்கும்) உகந்த கிருஷ்ண மற்றும் த்ரிவிக்ரம அவதாரங்கள் பாசுரத்தில் சுட்டப்படுகின்றன. அவற்றின்  பெருமை வாயிலாக,  கலியுகத்தில் அர்ச்சாவதார கோலத்தில் பெருமாள் திருவேங்கடமுடையானாக எழுந்தருளியுள்ள திருமலை திவ்விய தேசத்தின் மேன்மையை ஆழ்வார் பாசுரத்தில் போற்றுகிறார்.  கலியுகத்தில் "போற்றப் பறை தரும் புண்ணியன்" ஆனவன் அர்ச்சாவதாரா ரூபத்தில் அருளும் புண்ணியத் தலங்களில் தலையான மூன்றில் ஒன்று திருமலை. மற்றவை அவன் பள்ளி கொண்ட திருவரங்கமும், திருமந்திரம் அருளிய பத்ரிகாசிரமும் ஆகும்.


 கலியுகத்தில் திருவேங்கடமுடையான் ஒருவனைப் பற்றினாலே போதுமானது என்று அடியவர் நமக்கு ஆழ்வார் அறுதியிட்டுக் கூறுகிறார்.  நம் தீவினைகள் அனைத்தையும் அழித்து நம்மை தடுத்தாட்கொள்ள வல்லான் அவன் ஒருவனே என்கிறார்.


சுட்டப்பட்ட 2 அவதாரச் செயல்களிலும் ஓர் ஒற்றுமையைக் காணலாம். தமது வலிமையால் அகந்தை கொண்டவர்கள் (இந்திரன், மாவலிச் சக்கரவர்த்தி) தவறை உணர்ந்து அப்பரமனைச்  சரண் புகுந்த செய்தி இரண்டிலும் வெளிப்படுகிறது அல்லவா?

கிருஷ்ண அனுபவத்துக்கு ஒரு வடிவம் கொடுத்தால் அது நம்மாழ்வார் என்னும் அளவு, கிருஷ்ண பக்திப் பேருவகையில் திளைத்து நமக்கு திராவிட வேதம் அருளியவர், வைணவத்தின் ஆதி குருவான, திருக்குருகைப் பிரான்!

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் - ஆயர்கள் ஆண்டுதோறும் இந்திரனுக்கு விழா எடுத்து, அவனுக்குப் பல்வகையான  உணவுகளைப் படைப்பது வழக்கம். ஒரு சமயம் கண்ணபிரான், சூரியனும், வருணனும், கோவர்த்தன மலையும் சேர்ந்தே நமக்கு எரிக்க விறகும், உண்பதற்கு காய்கனிகளும், பசுக்களுக்குப் புல்லும் தருகையில், இந்திரனுக்கு விழா எதற்கு என்று ஆயர்களைத் தடுத்து விட்டான்.

அகந்தையின் காரணமாக கடுஞ்சீற்றம் கொண்ட இந்திரன், புயல் காற்றையும், பெருமழையையும் உண்டாக்கி (கண்ணனின் அன்புக்குரிய) ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி செய்தான். அப்போதும் அந்த மாயக்கண்ணன் இந்திரன் மேல்  கோபப்படவில்லை. குழந்தையிடமிருந்து ஒன்றைப் பிடுங்கிக் கொண்டால் அது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் என்பதை அறியாதவனா அந்தப் பரந்தாமன் :-) ஆனால், இந்திரனின்  அகந்தை அழிய  வேண்டும் , அவனுக்கு புத்தி வரவேண்டும் என்பதற்காகவே கண்ணனின்  "குன்றம் ஏந்தி குளிர்மழை காத்த" விளையாட்டு!

சென்று சேர் திருவேங்கட மாமலை - பரமன் சென்று தங்கி அருள் பாலிக்கும் திருமலை என்பது நேரடிப்பொருள். இதை இன்னொரு விதமாக பொருள் கொள்வதிலும் நயம் உள்ளது. அதாவது அடியவரான நாம் சென்று சேர வேண்டிய இடம் அந்த திருவேங்கட மாமலையே என்றும் கொள்ளலாம்.  அங்கு சென்றால் போதும் அல்லது சேர்ந்தால் போதுமே! எதற்கு "சென்று சேர" வேண்டும்? செல்லுதல் என்பது உடல் சார்ந்தது, சேர்தல் என்பது நம் மனம் (ஆன்மா) சார்ந்தது. அடியவரின் உடலும் உள்ளமும் ஒத்துழைத்தால்  தான், இறைவனைப் பற்ற இயலும், உய்வுக்கான பாதையில் பயணிக்க முடியும்.  அதாவது மெய்/ஆத்ம சுத்தி என இரண்டும் தேவை.

உய்வு (பரமபதம்/மோட்சம்) என்பது அழிவில்லா ஆன்மாவுக்குத் தானே! உடலுக்குத் தொடர்பு இல்லையே, என்று நமக்குத் தோன்றும். இவ்வுலகில் ஆன்மா தனியாக இயங்குவதில்லை, உடல் என்ற வாகனத்தின் பாதையோடு பிணைந்தது தான் ஆன்மாவின் வாழ்க்கையும்

மேலே சொன்னதை நம்மாழ்வார் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வுடன் ஒப்பு நோக்கினால் "சென்று சேர்" என்பதின் சாராம்சத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.  பின்னாளில் நம்மாழ்வாருக்கு சீடரான மதுரகவியார், ஆழ்வாரை முதலில்  சந்தித்தபோது "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்ற கேள்வியை வீச, கண் திறந்த ஆழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அருளினார். இந்த கேள்வி பதிலுக்கான உட்பொருள் ஆழமானது. இங்கே செத்தது என்பது உடல், சிறியது என்பது உயிர் (அ) ஆன்மா

எளிமையாக விளக்க வேண்டுமென்றால், பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அவ்வுடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்பவே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞானத்தை உணர்வதில் உடலெனும் கூடுக்கும் பங்கிருக்கிறது என்ற செய்தியும் இதில் பொதிந்திருப்பதாகக் கொள்ளலாம்! ஆக, ஆன்மா உய்வுற (முக்தி ) ஒரு பிறப்பே போதுமானதாகவும் இருக்கலாம், பல பிறப்புகளும் தேவைப்படலாம்.

--- எ.அ.பாலா

Sunday, January 03, 2010

553. பார்த்தசாரதி-ராப்பத்து உத்சவம்-படங்கள்

மார்கழி ராப்பத்து (10 நாட்கள்) உத்சவத்தின்போது தினம் (சுமார்) 100 பாசுரங்களாக நம்மாழ்வாரின் திருவாய்மொழி பெரும்பாலான பெருமாள் கோயில்களில் ஓதப்படுகிறது.

இன்று பார்த்தசாரதி கோயில் உத்சவ மூர்த்தி முத்தங்கி
சேவையில் வீதி உலா வந்தபோது எடுத்த புகைப்படங்கள்!

படங்களை கிளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்.

பெருமாள் பிராட்டிகளோடு:

வேதம் தமிழ் செய்த மாறன் (நம்மாழ்வார்)
பராங்குச நாயகியைப் போன்ற திருக்கோலத்தில்

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails